கிருஷ்ணகிரி, பிப்.28: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் 10அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி, காலவரையாற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி, கடந்த 22, 23 மற்றும் 26ஆகிய 3 நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலவரையாற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம், கிருஷ்ணகிரி, ஓசூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் நிலையிலான பணியாளர்கள் என, மொத்தம் 190 பெண் அலுவலர்கள் உள்பட மொத்தம் 389 பேர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் நேற்று அனைத்து அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிசோடி காணப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் கூறுகையில், வருவாய்த்துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கான, புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஏற்கனவே பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் என்றார்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், தாலுகா அலுவலகங்களில் சாதி சான்று, வருமானச் சான்று, ப்டடா, சிட்டா உள்ளிட்ட சான்றுகள் வழங்கும் பணி, நாடாளுமன்ற தேர்தல் பணி, முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் பணி பாதிப்படைந்துள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
The post வருவாய்த்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.